கடைக்கு மின் இணைப்பு கொடுக்க லஞ்சம் வாங்கிய மின்வாரிய என்ஜினீயர் கைது

கடைக்கு மின் இணைப்பு கொடுக்க ரூ.2,500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-10-29 23:45 GMT

மதுரை,

மதுரை டி.வி.எஸ்.நகர், சத்தியசாய் நகரை சேர்ந்தவர் நாராயணன்(வயது 52). இவரது வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் கடை கட்டி வாடகைக்கு விட முடிவு செய்தார். அதன்படி கடைக்கு மின் இணைப்பு கேட்டு முத்துப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். பின்பு மின் இணைப்பிற்கான கட்டணத்தை செலுத்தி புதிய இணைப்புக்காக காத்திருந்தார்.

அப்போது மின்வாரிய உதவி என்ஜினீயர் ரவிக்குமார்(53), ரூ.2,500 கொடுத்தால் உடனே கடைக்கு இணைப்பு கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாராயணன் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.

அதன்பேரில் மின்வாரிய உதவி என்ஜினீயர் ரவிக்குமாரை கையும் களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் நாராயணனிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அளித்தனர். பின்னர் அந்த நோட்டுகளை எடுத்து கொண்டு அவர் நேராக மின்வாரிய அலுவலகத்திற்கு நேற்று மதியம் சென்றார். அங்கு என்ஜினீயரிடம் நாராயணன் பணத்தை கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின்னர் என்ஜினீயர் ரவிக்குமாரிடம் விசாரணை நடத்தி லஞ்ச பணத்துடன் அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்