நாகர்கோவில் அருகே எந்திரத்தில் தலை சிக்கி தொழிலாளி சாவு
நாகர்கோவில் அருகே வலை கம்பெனி எந்திரத்தில் தலை சிக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
மேலகிருஷ்ணன்புதூர்
இதுபற்றிய விவரம் வருமாறு:-
நாகர்கோவில் அருகே மேலகிருஷ்ணன்புதூரை அடுத்த நையினாபுதூரில் தனியார் மீன் வலை கம்பெனி உள்ளது. இங்கு வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த அஜய்ரசாக் (வயது 21) என்பவர் நேற்று முன்தினம் இரவு பணியில் ஈடுபட்டார். நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் அவர் வேலை செய்து கொண்டு இருக்கும் போது, எதிர்பாராதவிதமாக எந்திரத்தில் அவர் தலை சிக்கி நசுங்கியது. உடனே அருகில் இருந்த தொழிலாளர்கள் எந்திரத்தை நிறுத்தி அஜய்ரசாக்கை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்ய, இன்ஸ்பெக்டர் செல்வம் விசாரணை நடத்தி வருகிறார்.