மருந்துக்கடை பெண் ஊழியரை கொலை செய்தது ஏன்? கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம்

மருந்துக்கடை பெண் ஊழியரை கொலை செய்தது ஏன்? என்று கைதான காதலன் பர பரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2018-11-03 23:15 GMT
ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள குலமங்கலம் வடக்கு பகுதியை சேர்ந்தவர் சித்திரைவேலு. இவரது மகள் கஸ்தூரி (வயது 19). இவர் ஆலங்குடி காமராஜர் சிலை அருகில் உள்ள ஒரு மருந்துக்கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 28-ந்தேதி வேலைக்கு சென்ற கஸ்தூரி பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மழையூர் அருகேயுள்ள அதிரான்விடுதியை சேர்ந்த கருப்பையா மகன் நாகராஜ் (27) என்பவரை கைது செய்தனர்.

போலீசாரின் விசாரணையில், நாகராஜ் ஆலங்குடி அருகே ஆண்டிகுளத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கிக்கொண்டு, கஸ்தூரி வேலை செய்த மருந்துக்கடைக்கு எதிரில் சரக்கு ஆட்டோவை வாடகைக்கு ஓட்டி வந்தபோது, கஸ்தூரியுடன் பழக்கம் ஏற்பட்டு, காதலித்து வந்ததும், கடந்த மாதம் 28-ந்தேதி ஆதனக்கோட்டை சாலையில் உள்ள காட்டில் இருவரும் தனிமையில் இருக்கும்போது கஸ்தூரிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், இதில் அவர் உயிரிழந்து விட்டதாகவும் தெரியவந்தது.

மேலும், கஸ்தூரியின் உடலை சாக்கு மூட்டையில் வைத்து கட்டி, சரக்கு ஆட்டோவில் ஏற்றி தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் பாப்பான்கன்னி ஆற்றில் போட்டுவிட்டு, சென்னை செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து ஆலங்குடி போலீசார் மல்லிப்பட்டினத்தில் உள்ள பாப்பான்கன்னி ஆற்றுக்கு சென்று கஸ்தூரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே கஸ்தூரி சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட நாகராஜிடம் போலீசார் மீண்டும் விசாரணை மேற்கொண்ட னர். அப்போது போலீசாரிடம் நாகராஜ் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது:-

நானும், கஸ்தூரியும் ஆண்டிகுளத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தோம். அப்போது நான் எனது பாட்டி எனக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்திருப்பதாக கஸ்தூரியிடம் கூறினேன். இதைக்கேட்டதும் கஸ்தூரி, தன்னை ஏமாற்றிவிட்டதாக என்னிடம் சண்டை போட்டார். உடனே நான் கஸ்தூரியை கீழே தள்ளிவிட்டேன். இதில் சுவரில் மோதி, பின்பக்க தலையில் பலமாக அடிபட்டதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இதையடுத்து உறவினர்கள் உதவியுடன் அவரது உடலை மறைத்து எடுத்துச்சென்று ஆற்றில் வீசினேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, ஆலங்குடி போலீசார் கொலைக்குற்றம், தடயங்களை மறைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நேற்று நாகராஜை ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி கலைநிலா முன்பு ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து அவர் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக நாகராஜின் உறவினர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்