சென்னை முகப்பேரில் பிளஸ்-2 மாணவருக்கு ஆசிரியை பாலியல் தொல்லையா? விசாரணை நடத்த போலீஸ் முடிவு

சென்னை முகப்பேரில் பிளஸ்-2 மாணவருக்கு ஆசிரியை பாலியல் தொல்லை கொடுத்தாரா? என அந்த ஆசிரியையிடம் போலீசார் விசாரணை செய்ய முடிவு செய்து உள்ளனர்.

Update: 2018-11-03 23:24 GMT
அம்பத்தூர்,

மாங்காட்டை சேர்ந்த 17 வயது மாணவர், சென்னை முகப்பேர் மேற்கில் உள்ள தனியார் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். அந்த பள்ளியில் 47 வயதான ஆசிரியை கம்ப்யூட்டர் பாடம் நடத்தி வந்தார். இவர், அந்த மாணவரிடம் உரிமை எடுத்து பழகியதாகவும், மாணவரும் ஆசிரியையுடன் அன்போடு பழகியதாகவும் கூறப்படுகிறது.

பள்ளி நேரம் தவிர்த்து வீட்டில் இருக்கும்போதும், மாணவரும், ஆசிரியையும் அடிக்கடி செல்போனில் நீண்டநேரம் பேசி வந்தனர். இரவு நேரத்திலும் இந்த பேச்சு தொடர்ந்து உள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த மாணவரின் தந்தை, மகனை கண்டித்தார். ஆனாலும் அவர் ஆசிரியையுடன் தொடர்ந்து பேசி வந்தார்.

இதுபற்றி அந்த மாணவரின் தந்தை, 2 முறை பள்ளி நிர்வாகத்திடம் புகார் செய்தார். மேலும் கடந்த மாதம் இதுகுறித்து மாங்காடு போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தார். போலீசார், மாணவரையும், அவரது தந்தையையும் அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் புகாருக்கு உள்ளான ஆசிரியையை, பள்ளி நிர்வாகம் தற்காலிக பணி இடைநீக்கம் செய்தது. இதனால் ஆசிரியை பள்ளிக்கு வரவில்லை. ஆனாலும் அவரும், மாணவரும் தொடர்ந்து செல்போனில் பேசி வந்தனர்.

இதனால் மேலும் கோபம் அடைந்த மாணவரின் தந்தை, இதுபற்றி நொளம்பூர் போலீசில் புகார் செய்தார். அதில், “எனது மகனிடம், அவனது பள்ளி ஆசிரியை அத்துமீறி நடந்து வருகிறார். பலமுறை கண்டித்த பின்பும் தொடர்ந்து அவனிடம் செல்போனில் பேசி வருகிறார். இது மாணவனின் மனநிலையை பாதிக்கிறது. எனவே பள்ளி ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறி இருந்தார்.

இதையடுத்து நொளம்பூர் போலீசார் புகாருக்கு உள்ளான ஆசிரியையை தொடர்பு கொண்டு கேட்டனர். அப்போது அவர், நான் தற்போது சொந்த ஊரான கேரளா வந்து உள்ளேன். அடுத்த வாரம் சென்னை வரும்போது கண்டிப்பாக போலீஸ் நிலையம் வருகிறேன்” என்றார்.

மேலும் அவர், போலீசாரிடம் “எனக்கு கல்லூரியில் படிக்கும் ஒரு மகள் உள்ளார். நான் மாணவரிடம் தவறான எண்ணத்தில் பேசவில்லை. அன்போடுதான் பேசினேன். ஆனால் அவனது பெற்றோர் தவறாக நினைத்து புகார் அளித்து உள்ளதாக” கூறியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து போலீசார் கூறும்போது, “கேரளா சென்று உள்ள ஆசிரியை அடுத்த வாரம் விசாரணைக்கு ஆஜராக உள்ளார். அப்போது அவரிடம், பள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாரா? என்பது குறித்து விசாரிக்க முடிவு செய்து உள்ளோம். விசாரணைக்கு பிறகுதான் இதில் உள்ள உண்மை நிலவரம் தெரியவரும் என்றனர்.

மேலும் செய்திகள்