உத்தரகோசமங்கை கோவிலில்: காவலாளியை தாக்கிவிட்டு அபூர்வ மரகத நடராஜர் சிலையை திருட முயற்சி - எச்சரிக்கை மணி ஒலித்ததால் தப்பி ஓட்டம்

உத்தரகோசமங்கை கோவிலில் நள்ளிரவில் காவலாளியை தாக்கிவிட்டு அபூர்வ மரகத நடராஜர் சிலையை திருட முயன்ற கொள்ளையர்கள் எச்சரிக்கை மணி ஒலித்ததால் தப்பி ஓடிவிட்டனர்.

Update: 2018-11-04 22:45 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ளது புகழ் வாய்ந்த திருஉத்தரகோசமங்கை கோவில். உலகிலேயே முதலில் தோன்றிய கோவில் என்று கருதப்படும் இந்த கோவிலில் மங்களநாதர், மங்களநாயகி ஆகியோர் எழுந்தருளி உள்ளனர். இந்தக் கோவிலில் ஒரே கல்லினால்ஆன அபூர்வ பச்சை மரகத நடராஜர் சிலை உள்ளது.

விலைமதிக்க முடியாத மிகவும் பழமை வாய்ந்த இந்த நடராஜர் சிலை ஒலி, ஒளி அதிர்வுகளால் பாதிக்கப்படாத வகையில் ஆண்டு முழுவதும் சந்தனத்தால் பூசப்பட்டு பாதுகாக்கப்பட்டு இருக்கும். ஆண்டுக்கு ஒருநாள் சிவனுக்கு உகந்த நாளாக கருதப்படும் திருவாதிரை திருநாளில் ஆருத்ரா தரிசனத்தன்று நடராஜர் மீது பூசப்பட்ட சந்தனம் களையப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படும்.

ஒருநாள் முழுவதும் சந்தனக்காப்பு களைந்து வைக்கப்பட்டு மறுநாள் அதிகாலை மீண்டும் சந்தனம் பூசப்படும். அவ்வளவு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் இந்த நடராஜர் சிலை அமைந்துள்ள சன்னதி கதவுகளால் பூட்டி வைக்கப்பட்டு இருக்கும். நாள்தோறும் இந்த சன்னதியில் நடராஜருக்கு பதிலாக சிறிய அளவிலான ஸ்படிக லிங்கத்திற்கு பூஜை அபிஷேக ஆராதனைகள் செய்யப்படும். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கோவிலில் பூஜைகள் முடிந்தபின்னர் கோவில் கதவு சாத்தப்பட்டு அனைவரும் சென்றுவிட்டனர். கோவிலுக்குள் காவலர்கள் மட்டும் இருந்தனர்.

நள்ளிரவில் நடராஜர் சன்னதியில் திடீரென்று 2 மர்ம நபர்கள் புகுந்துள்ளனர். சத்தம் கேட்டு காவலாளி செல்லமுத்து ஓடியுள்ளார். ஆனால், அதற்குள் 2 மர்ம நபர்களும் கம்பி போன்ற ஆயுதத்தால் பலமாக செல்லமுத்துவின் தலையில் தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர் அந்த இடத்திலேயே விழுந்தார். இதனை தொடர்ந்து நடராஜர் சன்னதி பகுதிக்கு சென்ற மர்ம நபர்கள் நடராஜர் சன்னதி பாதுகாப்பு கதவை உடைத்து திறக்க முயன்றுள்ளனர். கதவை தொட்டதும் எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது.

இதனால் அச்சமடைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த ஒரு எச்சரிக்கை மணியை சேதப்படுத்தியுள்ளனர். ஆனால், வெளிப்புறம் அமைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை மணி தொடர்ந்து ஒலித்துள்ளது. இதனால் கலக்கமடைந்த நபர்கள் அங்கிருந்து வெளியேறி சுவர் ஏறி குதித்து தப்பி ஓடி விட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த உத்தரகோசமங்கை போலீசார் அங்கு விரைந்து விசாரணை நடத்தினர்.

கொள்ளையர்கள் தாக்கியதில் பின்னர் படுகாயமடைந்த காவலாளி செல்லமுத்து ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மர்ம நபர்கள் நடராஜர் சன்னதியின் பின் பகுதியில் போடப்பட்டிருந்த பழைய இரும்பு கதவுகள் வழியாக ஏறி சுவரை தாண்டி குதித்து உள்ளே நுழைந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள உருவங்களை வைத்தும், கோவில் பகுதியில் கிடந்த கைலி ஒன்றை வைத்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் கோவிலில் பதிவாகி உள்ள தடயங்களை பதிவு செய்தனர். அபூர்வ மரகத நடராஜர் சிலையை வெளியே கொண்டுவர முடியாது. ஏனெனில் உட்புற பகுதி மற்றும் கதவு, சிலையை விட சிறியதாக பாதுகாப்பு கண்ணோட்டத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.

நடராஜர் சிலை உள்ள கதவினை திறக்க முயன்றுள்ளதால் பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ள ஸ்படிக லிங்கத்தை திருட முயன்றிருக்கலாம் என்றும், நகைகள் இருந்தால் திருடிச்செல்ல வந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

மேலும் செய்திகள்