மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி பெண் பலி கணவர், குழந்தை உயிர்தப்பினர்

பட்டாபிராமில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி பெண் பலியானார். அவரது கணவரும், குழந்தையும் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.

Update: 2018-11-04 23:00 GMT
ஆவடி,

ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் ஜான்பார்த்திபன் (வயது 31). பிரபல கார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சாலோம் (30). இவர்களுக்கு 2½ வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

நேற்று முன்தினம் இரவு ஜான்பார்த்திபன் தனது மனைவி, குழந்தையுடன் ஆவடிக்கு வந்து விட்டு, மோட்டார் சைக்கிளில் முத்தாபுதுப்பேட்டை நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

பட்டாபிராம் மார்டன் சிட்டியில் உள்ள சி.டி.எச். சாலையில் வந்தபோது பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஜான்பார்த்திபன் உள்ளிட்ட 3 பேரும் கீழே விழுந்தனர். படுகாயம் அடைந்த சாலோமை மீட்டு ஆவடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஜான்பார்த்திபனும், அவரது குழந்தையும் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். விபத்து குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் திருவண்ணாமலையை சேர்ந்த ராஜேந்திரன் (43) என்பவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்