ஒரத்தநாட்டில் ஓட்டலில் தீ விபத்து; ரூ.10 லட்சம் பொருட்கள் சேதம் கியாஸ் சிலிண்டர்கள் வெடித்ததால் பரபரப்பு

ஒரத்தநாட்டில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்த தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. தீ விபத்தின்போது கியாஸ் சிலிண்டர்கள் சில வெடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-11-04 22:45 GMT
ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு யானைக்கார தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது53). இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒரத்தநாடு நகர செயலாளராக உள்ளார். இவர் தனது வீடு அருகே ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டல் கீற்று கொட்டகையில் செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஓட்டலின் கூரையில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து தீ மளமளவென ஓட்டல் முழுவதும் பரவியது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். மேலும் ஒரத்தநாடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

அப்போது ஓட்டலின் ஒரு பகுதியில் இருந்த கியாஸ் சிலிண்டர்கள் சில வெடித்து சிதறின. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. சிலிண்டர்கள் வெடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் ஓட்டல் முற்றிலும் எரிந்து நாசமானது. அங்கு இருந்த கிரைண்டர், மிக்சி, பிரிட்ஜ் மற்றும் மர சாமான்கள் உள்பட ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரத்தநாட்டில் ஓட்டல் தீப்பிடித்து எரிந்த காட்சி. 

மேலும் செய்திகள்