பன்றி காய்ச்சலுக்கு குழந்தை பலி: மர்மக்காய்ச்சலுக்கு பெண்ணும் சாவு

மதுரையில் பன்றி காய்ச்சலுக்கு குழந்தை பலியானான். மேலும் ஒரு பெண்ணும் மர்மக்காய்ச்சலுக்கு பலியான பரிதாபம்.

Update: 2018-11-04 22:00 GMT
மதுரை, 

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை சேர்ந்தவர் முருகன். இவருக்கு ஒரு வயதில் சக்திவேல் என்ற மகன் இருந்தான். கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதியடைந்து வந்த சக்திவேல், மேல்சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். அங்கு, அவனது ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சக்திவேலுக்கு பன்றி காய்ச்சலுக்கான தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி குழந்தை சக்திவேல் பரிதாபமாக இறந்துபோனது. இதன் மூலம் மதுரையில் பன்றி காய்ச்சலுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது.

இதுபோல், மதுரை அழகர்கோவிலை சேர்ந்த விஜயலட்சுமி (52) என்பவர் கடந்த ஒரு வாரமாக மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அவர் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி விஜயலட்சுமி இறந்தார். 

மேலும் செய்திகள்