திருத்துறைப்பூண்டி வீரன்நகர் பகுதியில் மழைநீர் வடியாததால் தொற்றுநோய் பரவும் அபாயம்

திருத்துறைப்பூண்டி வீரன்நகர் பகுதியில் மழைநீர் வடியாததால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. உடனே மழைநீரை அகற்ற வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-11-05 22:45 GMT
திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகில் திருவாரூர் சாலையில் வீரன் நகர் உள்ளது. இதில் 40-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். திருத்துறைப்பூண்டியில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இதனால் வீரன் நகரில் மழைநீர் வடியாமல் தேங்கி உள்ளது. மேலும், 20-க்கும் மேற்பட்ட குடிசை வீடு பகுதிகளில் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி இருப்பதால் பாம்பு போன்ற விஷ பூச்சிகள் தங்கள் வீடுகளுக்கு வருவதால் இரவு நேரத்தில் தூங்க முடியவில்லை என அந்த பகுதிமக்கள் கூறியுள்ளனர்.

தேங்கி உள்ள மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்