கரூர் கடைவீதிகளில் தீபாவளி பொருட்கள் விற்பனை அமோகம் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் கண்காணிப்பு

கரூர் கடைவீதிகளில் தீபாவளி பொருட்கள் விற்பனை படுஜோராக நடந்தது. திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-05 22:30 GMT
கரூர்,

ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை சிறப்பு வாய்ந்தது. நரகாசுரன் என்கிற அரக்கணை இறைவன் வதம் செய்ததால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக இந்த பண்டிகை கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் ஒவ்வொருவரது வாழ்வில் துன்பம் எனும் இருள் நீங்கி, மகிழ்ச்சி எனும் ஒளி பிறக்க தீபம் ஏற்றி இந்த பண்டிகையன்று வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இன்று காலையிலேயே எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, இனிப்பு பலகாரம் சாப்பிட்டு பண்டிகையை மகிழ்ச்சியுடன் மக்கள் கொண்டாடுவர். அந்த வகையில் தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக கரூர் ஜவகர்பஜார், கோவைரோடு, பழைய பைபாஸ்ரோடு, செங்குந்த புரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள முக்கிய கடைவீதிகளில் மக்கள் கூட்டம் நேற்று அலைமோதியபடி இருந்தது. அங்கிருந்த ஜவுளி கடைகள், தரைக்கடைகள் உள்ளிட்டவற்றில் விற்பனை படுஜோராக நடந்ததை காண முடிந்தது. திருவள்ளுவர் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகளில் ஜவுளி, பூஜை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து விதமான பொருட்களும் கிடைத்ததால் அங்கு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதால் மைதானம் நிரம்பி வழிந்தது. அங்கு தங்களது நிதிக்கு ஏற்ற வகையில் தேவையான பொருட்களை தேடி பிடித்து வாங்கி சென்றனர்.

இதை தவிர கடைவீதிகளில் இருந்த இனிப்பு கடைகள், தற்காலிக இனிப்பு பலகார கடைகளிலும் பல்வேறு உணவு பதார்த்தங்களை தயார் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடந்தன. நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டோருக்கு அன்பு பரிசாக கொடுப்பதற்காக பேக்கிங் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை பலரும் ஆர்டரின் பேரில் வாங்கி சென்றனர். இனிப்பு பலகாரங்களில் நிறத்தை அதிகரிக்க செய்யும் பொருட்டு வேதியல் நிறமிகளை அதிகளவு சேர்க்க கூடாது, காலாவதியான மூலபொருட்களை பலகார தயாரிப்புக்கு பயன்படுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட விதிகளை பலகார கடைகாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று கரூர் கடைவீதிகளில் உள்ள இனிப்பு பலகார கடைகளில் அதிரடியாக புகுந்து உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் தரமான திண்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகிறதா?, குடோனில் சுத்தமான சூழலில் அவற்றின் தயாரிப்பு பணி நடக்கிறதா? என ஆய்வு செய்தனர். சில கடைகளில் இருந்து காலாவதியான உணவுகளை பறிமுதல் செய்து ஆய்வுக்காக அதிகாரிகள் எடுத்து சென்றதையும் காண முடிந்தது.

கோர்ட்டு அறிவுறுத்தலின் பேரில் மருத்துவமனை, வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவற்றின் அருகில் அல்லாமல் கரூர் மாவட்ட வருவாய்த் துறையினரிடம் உரிமம் பெற்று அரசு விதிகளின்படி ஆங்காங்கே பட்டாசு விற்பனையும் படுஜோராக நடந்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பட்டாசு விலைகள் ஏற்றமாக இருந்தன. இருப்பினும் மக்கள் பட்டாசுகளை தங்களது தேவைக்கேற்ப ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். புதிய ரக பட்டாசுகளின் விற்பனை அதிகமாக இருந்தது. பண்டிகையையொட்டி பெண்கள் பலர் அழகுசாதன பொருட்களை அதிக அளவில் வாங்கி சென்றதை காணமுடிந்தது. ஓட்டல், டீக்கடைகளிலும் வியாபாரம் மும்முரமாக இருந்தது.

தீபாவளி பொருட்கள் வாங்க வரும் மக்களின் கூட்டத்தை கண்காணிக்கும் பொருட்டு கரூர் தாலுகா அலுவலகம் முன்பு சி.சி.டி.வி. கேமரா கண்காணிப்பு அறை ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அங்கிருந்தபடியே திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, போலீசார் மக்கள் கூட்டத்தை கண்காணித்தனர். இதைதவிர கடைவீதிகளில் மக்களோடு மக்களாக சாதாரண உடை அணிந்தபடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேக நபர்களை விசாரித்து அனுப்பினர். திருவள்ளுவர் மைதானத்தின் முன்புறம், ஜவகர்பஜார், மனோகரா கார்னர் ரவுண்டானா, திண்ணப்பா கார்னர் ஆகிய இடங்களில் இரும்பு தடுப்பு வேலிகள் அமைத்து போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் பணியில் ஈடுபட்டு வாகன போக்குவரத்தினை கண்காணித்தனர். குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்தவர்கள் உள்ளிட்டோருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்