தஞ்சை அருகே அரசு பஸ் மோதி 2 தொழிலாளர்கள் பலி

தஞ்சை அருகே அரசு பஸ் மோதி 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.

Update: 2018-11-05 22:15 GMT
தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த மடிகை கிராமம் பள்ளிக்கூட காலனி தெருவில் வசித்தவர் கூத்தையன்(வயது 52). கூலி தொழிலாளி. இவரும் அதே கிராமத்தில் வடக்குதெருவில் வசித்து வந்த தொழிலாளியான முத்துசாமியும்(55) நெருங்கிய நண்பர்கள். இவர்கள் நேற்று அதிகாலை குளத்தில் மீன்பிடிப்பதற்காக சென்றனர். பின்னர் இயற்கை உபாதையை கழிப்பதற்காக சைக்கிளை உருட்டிக்கொண்டே 2 பேரும் சாலையோரம் நடந்து சென்றனர்.

அந்த நேரத்தில் பட்டுக்கோட்டையில் இருந்து அரியலூர் நோக்கி சென்ற அரசு பஸ் நடந்து சென்ற கூத்தையன், முத்துசாமி ஆகியோர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். விபத்து நடந்தவுடன் டிரைவர் பஸ்சை அந்த இடத்திலேயே நிறுத்தி விட்டு தப்பி சென்று விட்டார். இதனால் தஞ்சை-பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

2 பேர் பலியானதை அறிந்த உறவினர்கள் அங்கு விரைந்து வந்து இருவரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. விபத்து குறித்து தகவல் அறிந்த வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி, சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் 2 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போக்குவரத்தை சரி செய்தனர். இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேக கட்டுப்பாட்டு கருவி

தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் இருந்து பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி பகுதிகளுக்கு செல்லும் தனியார், அரசு பஸ்கள் வேகமாக செல்கின்றன. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் மிகவும் அச்சத்துடன் பயணம் மேற்கொள்கின்றனர். அதுவும் குறிப்பாக தனியார் பஸ்களின் வேகம் அதிகமாக இருக்கிறது.

இதனால் பஸ்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தி, விபத்துக்களை தவிர்க்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்