திருவாரூரில் தகராறை தடுக்க முயன்றவர் அரிவாளால் வெட்டிக்கொலை

திருவாரூரில், தகராறை தடுக்க முயன்றவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2018-11-08 23:15 GMT
திருவாரூர்,

திருவாரூர் அண்ணா தெருவை சேர்ந்தவர் ராஜயோகியம். இவருடைய மகன் தங்கபாண்டி(வயது 31). திருவாரூர் நெய்விளக்கு தோப்பு தெருவை சேர்ந்தவர் முத்து என்கிற மணிமாறன்(34). இவர்கள் இருவருக்கும் குடிபோதையில் தகராறு ஏற்பட்டு சமரசம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மணிமாறன் நெய்விளக்கு தோப்பு ஆற்றுப்பாலம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த தங்கபாண்டி, உன்னை இத்தனை நாள் விட்டு வைத்ததே தப்பு என தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மணிமாறனை வெட்ட முயன்றார்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த நெய்விளக்கு தோப்பு தெருவை சேர்ந்த மணி மகன் பால்பாண்டி(31), மச்சக்காளை மகன் பிரபாகரன்(27), தமிழ்செல்வன் மகன் பிரகாஷ்(22), கிருஷ்ணன் மகன் ரவி(33) ஆகிய 4 பேரும், தங்கபாண்டியை தடுக்க முயன்றனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த தங்கபாண்டி, பால்பாண்டியின் நெஞ்சு பகுதியில் வெட்டினார். மேலும் அவர்கள் அனைவரையும் அரிவாளால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த பால்பாண்டியை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பால்பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கபாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட பால்பாண்டிக்கு சித்ரா என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்