மதுகுடிக்க பணம் தர மறுத்த தந்தைக்கு கத்திவெட்டு; என்.எல்.சி. தொழிலாளி கைது

நெய்வேலி அருகே மதுகுடிக்க பணம் தர மறுத்த தந்தையை கத்தியால் வெட்டிய என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-11-08 22:15 GMT
நெய்வேலி, 

நெய்வேலி அருகே உள்ள சக்திநகரை சேர்ந்தவர் அருள்சாமி(வயது 88). இவருடைய மகன் ஏசுதாஸ். இவர் என்.எல்.சி. 2-வது அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக உள்ளார். குடிப்பழக்கம் உடைய இவர் தினமும் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். மேலும் தனது தந்தையிடம், மதுகுடிக்க பணம் கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு ஏசுதாஸ் மதுகுடிப்பதற்காக அருள்சாமியிடம் பணம் கேட்டுள்ளார். இதற்கு அருள்சாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த ஏசுதாஸ், அருள்சாமியை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். பலத்த காயமடைந்த அவர் வலியால் அலறித்துடித்தார். இவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து படுகாயமடைந்த அருள்சாமியை மீட்டு சிகிச்சைக்காக என்.எல்.சி. பொதுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து அருள்சாமியின் மற்றொரு மகன் வில்லியம்ஜேம்ஸ்(56) நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏசுதாசை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்