பெண்கள் மீது மயக்க மருந்து தெளித்து ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு

மத்தூர் அருகே பெண்கள் மீது மயக்க மருந்து தெளித்து ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டில் நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-11-09 23:30 GMT
மத்தூர்,

இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கண்ணண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வடுகிசெட்டி (வயது 53). இவர் சென்னையில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி கலாவதி. மருமகள் ஜெயா. வடுகிசெட்டி, மகனுடன் சென்னையில் தங்கி இருப்பதால் கலாவதி மருமகள், பேரன்களுடன் சொந்த ஊரில் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கலாவதி, மருமகள், பேரன்களுடன் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது மர்ம ஆசாமிகள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். சத்தம் கேட்டு கலாவதி, ஜெயா ஆகியோர் எழுந்து வந்தனர். அப்போது மர்ம ஆசாமிகள், 2 பேர் மீதும் மயக்க மருந்தை தெளித்து உள்ளனர். இதனால் அவர்கள் 2 பேரும் மயங்கி விழுந்தனர்.

பின்னர் மர்ம ஆசாமிகள் பீரோக்களை திறந்து அதில் இருந்த 25 பவுன் நகை, ரூ.1½ லட்சம் மதிப்பிலான வெள்ளிப்பொருட்கள், ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை திருடி கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். மயக்கம் தெளிந்து எழுந்த கலாவதி, ஜெயா ஆகிய 2 பேரும் நடந்த சம்பவம் குறித்து வடுகிசெட்டி மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த திருட்டு குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த துணிகர திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்