சூனியம் வைத்ததாக கருதி தம்பதி வெட்டிக் கொலை 2 பேர் கைது

புனே அருகே, சூனியம் வைத்ததாக கணவர், மனைவி வெட்டி கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-11-09 22:30 GMT
புனே, 

புனே அருகே, சூனியம் வைத்ததாக கணவர், மனைவி வெட்டி கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சூனியம் வைத்ததாக...

புனே மாவட்டம் கெட் பகுதியில் அனுதே கிராமத்தை சேர்ந்தவர் நவசு முகானே (வயது55). இவரது மனைவி லீலாபாய் (47). இவர்களுக்கு அந்த பகுதியை சேர்ந்த ஜெய்த்து போர்க்கர், பபன் முகானே ஆகியோருடன் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், ஜெய்த்து போர்க்கரின் மகளுக்கு வயிற்றில் கொப்பளங்கள் ஏற்பட்டு உள்ளன. இதேபோல பபன் முகானேயின் மனைவிக்கும் உடலில் தடிப்புகள் உண்டாகி இருந்தன.

அவர்கள் லீலாபாய் தான் தங்கள் மீது உள்ள முன்விரோதம் காரணமாக சூனியம் வைத்து விட்டதாக கருதினர். இதையடுத்து நேற்று முன்தினம் இருவரும் லீலாபாயின் வீட்டுக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தம்பதி வெட்டிக் கொலை

அங்கு வாக்குவாதம் முற்றியதில், திடீரென அவர்கள் தாங்கள் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் லீலாபாயை சரமாரியாக வெட்டினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நவசு முகானே அவர்களை தடுக்க முயன்றார். அவரையும் இருவரும் சரமாரியாக வெட்டினர். இதில் தம்பதி இருவரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் இருவரையும் கைது செய்தனர்.

சூனியம் வைத்ததாக கருதி கணவர், மனைவி கொல்லப்பட்ட இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்