14-ந் தேதி சேலத்துக்கு வருகை தரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

சேலத்துக்கு 14-ந் தேதி வருகை தரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்று மாநகர் மாவட்ட அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2018-11-09 23:57 GMT
சேலம்,

சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஜி.வெங்கடாசலம் தலைமை தாங்கினார். பன்னீர்செல்வம் எம்.பி. முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில், வருகிற 14-ந் தேதி சேலத்திற்கு வருகை தரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் வெங்கடாசலம் எம்.எல்.ஏ. பேசும் போது, ‘வருகிற 14-ந் தேதி இரவு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் வருகிறார். அவர், 15-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அப்போது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைவார்கள். அ.தி.மு.க. அரசு மக்களுக்கு வழங்கிய இலவச திட்டங்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைத்த சர்கார் பட குழுவினருக்கு சேலம் மாநகர், மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டனம் தெரிவித்து கொள்கிறோம்‘ என்றார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. செல்வராஜ், மாநகர் மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாசலம், துணை செயலாளர் ஏ.கே.எஸ்.எம். பாலு, கூட்டுறவு சங்க தலைவர்கள் கே.சி.செல்வராஜ், துரைராஜ், பெரியபுதூர் கண்ணன், ராம்ராஜ், சதீஷ்குமார், மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் கென்னடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்