காரைக்குடி அருகே கட்டிட தொழிலாளியை கொன்ற நண்பர் உள்பட 3 பேர் கைது

காரைக்குடி அருகே கட்டிட தொழிலாளியை கத்தியால் குத்திக் கொலை செய்த நண்பர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-11-10 22:00 GMT

காரைக்குடி,

காரைக்குடி அருகே உள்ள ராஜீவ்காந்திநகரை சேர்ந்தவர் முருகேசன்(வயது 22). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரும், அதே பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் ஜெயராமன்(24) என்பவரும் நெருங்கிய நண்பர்கள். சமீப காலமாக ஜெயராமனின் நடவடிக்கைகள் பிடிக்காததால் முருகேசன் அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அடிக்கடி மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உ.சிறுவயல் பகுதியில் வேலை தொடர்பாக முருகேசன் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஜெயராமனும், அவரது நண்பர்கள் விஜய்(24), திருப்பதி(16) ஆகியோர் அவரை வழிமறித்து தாக்கியுள்ளனர். பின்னர் விஜய்யும், திருப்பதியும் முருகேசனை பிடித்துக் கொள்ள ஜெயராமன் அவரை கத்தியால் சரமாரியாக குத்தினார். பின்னர் அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த முருகேசன் உயிருக்கு போராடினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்துபோனார்.

இதுகுறித்த புகாரின் பேரில் குன்றக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயராமன் நண்பர் ஜெயராமன் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

முன்னதாக இந்த வழக்கை போலீசார் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்திருந்த நிலையில், முருகேசன் இறந்துபோனதை அடுத்து கொலை வழக்காக பதிவு செய்து 3 பேரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்