தலைஞாயிறு பகுதியில் சம்பா சாகுபடியை வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு

தலைஞாயிறு பகுதியில் சம்பா சாகுபடியை நாகை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நாராயணசாமி ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2018-11-11 22:30 GMT
வாய்மேடு,

நாகை மாவட்டம் தலைஞாயிறு, ஓரடியம்புலம், வாட்டாக்குடி, பிரிஞ்சுமூலை உள்ளிட்ட பகுதிகளில் சம்பா சாகுபடியை வேளாண்மை இணை இயக்குனர் நாராயணசாமி, வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா, தலைஞாயிறு வேளாண்மை துணை அலுவலர் ஜீவகன், உதவியாளர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வில் பூச்சி தாக்குதல் மற்றும் வயல்களில் மழை நீர் தேங்கினால் அவற்றை எப்படி காப்பாற்ற வேண்டும்? என்பது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

பின்னர் வேளாண்மை இணை இயக்குனர் நாராயணசாமி கூறியதாவது:-

தலைஞாயிறு பகுதிகளில் 2018-19-ம் ஆண்டிற்கான தாளடி மற்றும் சம்பா நெற்பயிர்களுக்கான பிரதம மந்திரியின் காப்பீட்டு திட்டத்தில் உடனே பதிவு செய்ய வேண்டும். எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளில் இருந்து பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில் நுட்பங்கள் கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும், சம்பா மற்றும் தாளடி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெற் பயிர்களுக்கு விரைந்து காப்பீடு செய்ய வேண்டும்.

கடன் பெறாத விவசாயிகள் அங்கீகரிக்கப்பட்ட பொது சேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ, விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம். அதன்படி சம்பா மற்றும் தாளடி பருவத்தில் நெல் பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் வருகிற 30-ந்தேதி ஆகும்.

விதைத்து 75 நாட்கள் ஆகியும் இதுவரை கடன் பெறாத விவசாயிகள் பதிவு செய்யாமல் உள்ளனர். கனமழை பெய்து பயிர் பாதிப்பு உள்ளாவதற்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும். நாகை மாவட்டத்தில் 1 லட்சத்து 30 ஆயிரம் எக்டேரில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இதில் 70 சதவீதம் பேர் காப்பீடு தொகை செலுத்தி உள்ளனர். மீதம் உள்ளவர்கள் உடனடியாக காப்பீடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தலைஞாயிறு 3-ம் சேத்தியில் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள், வேளாண்மை இணை இயக்குனர் நாராயணசாமியிடம் மனு அளித்தனர்.

மேலும் செய்திகள்