மதுபாட்டிலால் குத்தி வாலிபர் கொலை: அண்ணி கைது

மதுபாட்டிலால் குத்தி வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடைய அண்ணியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-11-11 22:15 GMT
வலங்கைமான்,

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள செம்மங்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மகன் கணேசன் (வயது35). விவசாய தொழிலாளி. இவருக்கு திருமணமாகவில்லை. இவருடைய அண்ணன் அதே பகுதியை சேர்ந்த அயோத்திராமன். இவருடைய மனைவி மீரா (55). இவர்களுக்கு கோகுலகிருஷ்ணன் (21) என்ற மகன் உள்ளார்.

இவர் சென்னை மதுரவாயல் பகுதியில் பிளாஸ்டிக் கம்பெனியில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். தீபாவளி பண்டிகைக்காக விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த கோகுலகிருஷ்ணனுக்கும், கணேசனுக்கும் முன்விரோதம் காரணமாக சம்பவத்தன்று தகராறு ஏற்பட்டது.

அப்போது ஆத்திரம் அடைந்த கோகுலகிருஷ்ணன் மதுபாட்டிலை உடைத்து கணேசனை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த கணேசனை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இதுதொடர்பாக வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுலகிருஷ்ணனை கைது செய்து இருந்தனர். அவரிடம் நடைபெற்ற விசாரணையில் கொலைக்கு உடந்தையாக கணேசனின் அண்ணி மீராவும் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மீராவை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்