நூறு நாள் வேலை கேட்டு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நூறுநாள் வேலை கேட்டு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-12 23:00 GMT
கன்னியாகுமரி,

அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய குழு செயலாளர் லட்சுமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வாசுகி, ஜான்மேரி, சுதாராணி உள்பட பலர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மலைவிளை பாசி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது, அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்தில் வேலை அட்டை பெற்றுள்ள அனைத்து பணியாளர்களுக்கும் உடனடியாக 100 நாள் வேலை வழங்க வேண்டும், அவர்களுக்கு அரசு அறிவித்துள்ள தினக்கூலியாக ரூ.224 வழங்க வேண்டும், தூய்மை திட்ட பணியாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் மாவட்ட, வட்டார நிர்வாகிகள், விவசாய தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட தலைவர் கண்ணன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்