நாமக்கல்லில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலைமறியல் 70 பேர் கைது

நாமக்கல்லில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 70 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-11-13 23:00 GMT
நாமக்கல்,

நாமக்கல் பூங்கா சாலையில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. நாமக்கல் மாவட்ட செயலாளர் வேலுசாமி தலைமை தாங்கினார்.

இதில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.380-ஐ வழங்க கோரியும், பாதுகாப்பு உபகரணங்களை வழங்க கோரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் கோஷங்களை எழுப்பினர். மேலும் ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு, படிப்படியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

அதேபோல் மாதந்தோறும் 25 நாட்களுக்கு வேலையையும், அடையாள அட்டையையும் வழங்க வேண்டும் என்றும் மின் விஸ்தரிப்பு பணிகளை ஏற்கனவே நடைமுறையில் இருந்த ‘சிட் அக்ரிமெண்ட்‘ மூலம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கிட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதில் நாமக்கல் கிளை செயலாளர் கோவிந்தராசு, கோட்ட செயலாளர் சவுந்திரராஜன், பரமத்தி வேலூர் கோட்ட தலைவர் குப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து நாமக்கல் பூங்கா சாலை நுழைவாயில் அருகே மின் வாரிய தொழிலாளர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் சிறிது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குலசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட 70 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

மேலும் செய்திகள்