ஓடும் ரெயிலில் செல்போன் பறித்ததால் தவறி விழுந்த பயணி சாவு; 2 சிறுவர்கள் கைது

ஓடும் ரெயிலில் செல்போன் பறித்தபோது தவறி விழுந்து காயம் அடைந்த பயணி இறந்தார். இந்த வழக்கில் தேடப்பட்ட 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-11-14 21:15 GMT

மீஞ்சூர்,

மீஞ்சூரை அடுத்த நந்தியம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த வாரம் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் மெதுவாக சென்றது. அப்போது படிக்கட்டில் அமர்ந்து செல்போனில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த சித்தேஸ்வரதாஸ் (வயது 44) பேசிக்கொண்டு பயணம் செய்தார்.

அப்போது நந்தியம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்த 2 பேர் நைசாக சித்தேஸ்வரதாசிடம் செல்போனை பறித்தனர். அப்போது ரெயிலில் இருந்து தவறி விழுந்து சித்தேஸ்வரதாஸ் படுகாயம் அடைந்தார்.

அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கொருக்குபேட்டை ரெயில்வே போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இதுதொடர்பாக நந்தியம்பாக்கத்தை சேர்ந்த 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்