பழனி பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்

பழனி பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-11-15 22:45 GMT
பழனி,

பழனி பஸ்நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இதில் சில கடைகளின் முன்புள்ள இடத்தை ஆக்கிரமிப்பு செய்து இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து நகராட்சி கமிஷனர் நாராயணன் தலைமையில் நேற்று முன்தினம் பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது. இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. அப்போது நகராட்சி கமிஷனர் நாராயணன், பொறியாளர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மேலும் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னிவளவன் தலைமையில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே கோவை பஸ்கள் நிற்கும் நடைமேடை பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்ற தொடங்கினர். அப்போது அங்கு திரண்டு வந்த வியாபாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தடுத்தனர். மேலும் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்வதாக தெரிவித்தனர். ஆனால், ஆக்கிரமிப்பை அகற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் பொக் லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் நகராட்சி கமிஷனர், அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே போலீசார் அவர்களை தடுக்க முயன்றனர். அப்போது போலீசாருக்கும், வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கமிஷனர் நாராயணன், வியாபாரிகளை சமாதானம் செய்தார். பின்னர் வியாபாரிகளே ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதைத்தொடர்ந்து நகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் திரும்பி சென்றனர். 

மேலும் செய்திகள்