கிருஷ்ணகிரி, ஊத்தங்கரையில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, ஊத்தங்கரையில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-16 22:30 GMT

ஊத்தங்கரை, 

கிருஷ்ணகிரியில், ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் சிவகுமார் தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி ஆதார கிளை செயலாளர் கோபால், பொருளாளர் சுந்தரம், பர்கூர் ஆதார கிளை தலைவர் கோபாலகிருஷ்ணன், நிர்வாகிகள் சந்திரசேகர், தண்டபாணி, பெரியதம்பி உள்பட பலர் பங்கேற்றனர். இதில், நீதித்துறை ஓய்வு பெற்ற சங்க தலைவர் ராஜாமணி கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது, 8-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி அரசாணை 313-ஐ 1.1.2016 முதல் அமல்படுத்த வேண்டும். மாத ஊதியக்குழு நிலுவையை உடனே வழங்க வேண்டும். குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும். மத்திய அரசு போன்று மாதம் ஆயிரம் ரூபாய் மருத்துவப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் கிருஷ்ணகிரி ஆதாரக்கிளை தலைவர் சுப்பிரமணியம் மற்றும் மாவட்ட பொருளாளர் ஜெகன்நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊத்தங்கரையில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஓய்வு பெற்ற அலுவலர் சங்க தலைவர் மாரிசெட்டி தலைமை தாங்கினார். மாநில பிரதிநிதி சிவலிங்கம், ஒன்றிய பொருளாளர் பெருமாள், துணைத்தலைவர் முருகேசன், ஒன்றிய இணை செயலாளர் பழனி, ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், அனைத்து அலுவலக ஊழியர் சங்க பொறுப்பாளர் தண்டபாணி, ஓய்வு பெற்ற ஆசிரியை அழங்காரமணி, ஊர்நல அலுவலர் (ஓய்வு) பகவதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் செயலாளர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்