ஈரோடு கலெக்டரிடம் கிருமி நாசினி வழங்கிய வணிகர்கள்

காய்ச்சல் பரவுவதை தடுக்க தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் திரவ கிருமிநாசினிகளை ஈரோடு மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார்கள்.

Update: 2018-11-16 22:30 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் காய்ச்சல் பரவுவதை தடுக்க ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். அவர் பல்வேறு இடங்களுக்கும் நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். ஆஸ்பத்திரிகள், பள்ளிக்கூடங்களில் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க திரவ கிருமி நாசினிகள் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறார். அதன்படி தேவையான திரவ கிருமி நாசினி புட்டிகளை பெற்று அரசு ஆஸ்பத்திரி மற்றும் அரசு பள்ளிக்கூடங்களுக்கும் வழங்கி வருகிறார். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் திரவ கிருமிநாசினி புட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட செயலாளர் எஸ்.பொன்பாண்டி மற்றும் நிர்வாகிகள் திரவ கிருமிநாசினிகளை ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவனிடம் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி டாக்டர் கலைவாணி கலந்து கொண்டார். மொத்தம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான தலா ½ லிட்டர் கொண்ட 240 புட்டி கிருமிநாசினி வழங்கப்பட்டது. இதை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் கதிரவன், ‘தற்போது காய்ச்சல் உள்ளிட்ட நோய்த்தொற்றுகள் பரவாமல் இருக்க திரவ கிருமிநாசினியை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் செய்திகள்