நவிமும்பையில் பெண் போலீசை மிரட்டி கற்பழித்த சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு

நவிமும்பையில் பெண் போலீசை மிரட்டி கற்பழித்த சப்-இன்ஸ்பெக்டர் மீது கமிஷனர் உத்தரவின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Update: 2018-11-17 22:56 GMT
மும்பை,

நவிமும்பை பேலாப்பூர் சி.பி.டி. போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் அமித் செலார். இவர் பெண் போலீஸ் ஒருவரை மிரட்டி கற்பழித்ததாக கூறப்படுகிறது.

மேலும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர் பெண் போலீசை ஆபாசமாகவும் படம் பிடித்து உள்ளார். அந்த வீடியோ காட்சியை வெளியிட்டு விடுவதாக மிரட்டி அடிக்கடி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதனால் எரிச்சல் அடைந்த பெண் போலீஸ், இதுபற்றி தனது கணவரிடம் கூறினார். பின்னர் கணவர், மனைவி இருவரும் நவிமும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமாரை சந்தித்து சப்-இன்ஸ்பெக்டர் மீது புகார் கொடுத்தனர்.

இதையடுத்து போலீஸ் கமிஷனர், பெண் போலீஸ் புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க சி.பி.டி. நிலைய போலீசுக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் அமித் செலார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதுக்குறித்து விசாரணை நடத்த, போலீசார் அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது, அவர் பெண் போலீஸ் புகாரின் பேரில் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்து தலைமறைவானது தெரியவந்தது. போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்