அரசு டவுன் பஸ்சில் மாணவர்கள் ஆபத்து பயணம்

நயினார்கோவில் பகுதியில் அரசு டவுன் பஸ்சில் மாணவர்கள் ஆபத்து பயணம் மேற்கொள்வதால் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-11-18 23:00 GMT

நயினார்கோவில்,

பரமக்குடி தாலுகா நயினார்கோவிலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.பெருபாலான மாணவர்கள் இலவச பஸ் பாஸ் பயன்படுத்தி பயணம் செய்துவருகின்றனர்.

இவர்கள் காலை வேளையில் பள்ளிக்கு செல்ல அந்த வழியாக 8–ம் எண் அரசு டவுன் பஸ் மட்டுமே உள்ளது. இதனால் பஸ்சில் கூட்டம் நிரம்பி மாணவர்கள் ஆபத்தான நிலையில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்து வருகின்றனர்.

எனே ஆபத்தான பயணத்தை தடுக்க கூடுதலாக ஒரு டவுன் பஸ் இயக்க மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:– நயினார்கோவில் அரசு மேல்நிலை பள்ளியில் படித்துவரும் எங்களுக்கு பயணம் செய்வது மிகவும் சிரமமாக உள்ளது.கூடுதலாக இயங்கி வந்த 32–ம் எண் டவுன் பஸ் ½ மணி நேரம் தாமதமாக வருவதால் வேறு வழி இல்லாமல் இந்த ஒரு பஸ்சில் இளமனூர், கண்ணதேவன்புலி, கரைமேல்குடியிருப்பு, வலசை, அண்டக்குடி, வாணியவல்லம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 8–ம் எண் டவுன் பஸ்சிலேயே பயணம் செய்து வருகிறோம்.

ஒரு சில நேரங்களில் மாணவிகளே படிகளில் தொங்கியபடி செல்லவேண்டிய அவல நிலையில் உள்ளது. சில நேரங்களில் கூட்டம் அதிகம் இருப்பதால் பள்ளிக்கு செல்வதையே தவிர்த்து வருகிறோம். எங்களால் பணம் செலுத்தி வாடகை வாகனங்களில் போகும் அளவுக்கு வசதி இல்லாததால் கூடுதல் டவுன் பஸ் இயக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்