ஊட்டத்தூர் கோவிலில் கொள்ளை முயற்சி; பல லட்சம் ரூபாய் நகைகள், சிலைகள் தப்பின

ஊட்டத்தூர் கோவிலில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. அலாரம் ஒலித்ததால் மர்மநபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள், சிலைகள் தப்பின.

Update: 2018-11-19 23:00 GMT
சமயபுரம்,

திருச்சி மாவட்டம், சிறுகனூர் போலீஸ் சரகம் ஊட்டத்தூரில் பிரசித்தி பெற்ற சுத்தரத்தினேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவில் நடை தினமும் காலை 8 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு சாத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்த பின்னர் கோவில் குருக்கள் நடராஜன் வீட்டுக்கு சென்று விட்டார். தொடர்ந்து காவலாளி உதயகுமார் கோவிலை பூட்டிவிட்டு, வீட்டுக்கு சென்றார்.

இந்நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் கோவிலின் பின்புறமுள்ள மதில் சுவரில் கயிறு மூலம் ஏறி, உள்ளே குதித்தனர். தொடர்ந்து அவர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவின் வயரை அறுத்துவிட்டு, கோவிலின் நடுப்பக்க கதவின் பூட்டை கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் உடைத்து உள்ளே சென்றனர்.

பின்னர் அவர்கள் கோவிலுக்குள் நகைகள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்று, அங்கிருந்த பெட்டகத்தின் பூட்டை உடைக்க முயன்றனர். அது வலுவாக இருந்ததால் அவர்களால் உடைக்க முடியவில்லை. ஆனாலும் அவர்கள் தொடர்ந்து உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் கோவிலில் இருந்த அலாரம் ஒலித்தது. சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் கூடினர். இதற்கிடையே உஷாரான கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

கோவிலில் கொள்ளை முயற்சி நடந்துள்ளதை அறிந்த பொதுமக்கள் உடனடியாக சிறுகனூர் போலீஸ் நிலையத்திற்கும், கோவில் செயல் அலுவலர் முத்துராமனுக்கும் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கோவில் செயல் அலுவலரும் கோவிலுக்கு வந்து பார்வையிட்டார்.

மேலும் திருச்சியில் இருந்து வந்திருந்த விரல்ரேகை நிபுணர்கள், கொள்ளையர்களின் விரல் ரேகைகளை பதிவு செய்தனர். அலாரம் ஒலித்ததால் கோவிலின் தனித்தனி பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளும், பெருமாள் கோவில், கோதண்டராமர் கோவில், செல்லியம்மன் கோவில் ஆகிய கோவில்களை சேர்ந்த சுமார் 74 சிலைகளும் தப்பின. இந்த கொள்ளை முயற்சி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்