மனைவியை அடித்துக்கொன்று விவசாயி தற்கொலை குடும்ப தகராறில் பயங்கரம்

திருமருகல் அருகே குடும்ப தகராறில் மனைவியை அடித்துக்கொன்று விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-11-19 23:00 GMT
திருமருகல்,

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அம்பல்மெயின்ரோட்டை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது47).விவசாயி. இவருடைய மனைவி ரேவதி(40). இவர்களுக்கு சம்பத்(வயது17), சரவணன்(14), சஞ்சய்(12) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். வெங்கடேசனுக்கும் அவருடைய மனைவி ரேவதிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு கணவன்- மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் தனது மனைவி ரேவதியை கட்டையால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்த ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிசிக்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்தநிலையில் வெங்கடேசன் திடீரென மாயமானார். இதனால் அவரை அவரது மகன்கள் தேடினர். அப்போது

வெங்கடேசன் தனது வீட்டின் கொல்லைப்புறத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். மனைவியை அடித்துக்கொன்றதால் போலீஸ் விசாரணைக்கு பயந்து வெங்கடேசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் திட்டச் சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குடும்ப தகராறில் மனைவியை அடித்துக்கொன்று விட்டு விவசாயி தற்கொலை செய்த சம்பவம் திரு மருகல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்