புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர்களுக்கு எதிரான போராட்டத்தை தி.மு.க.வினர் தூண்டி விடுகின்றனர்

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர்களுக்கு எதிரான போராட்டத்தை தி.மு.க.வினர் தூண்டி விடுகின்றனர் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2018-11-20 23:15 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்துக்கு எந்த திட்டத்தை நான் கொண்டு வந்தாலும் அதை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே சிலர் எதிர்த்து வருகிறார்கள். நான் அரசியல் பாகுபாடு காரணமாகவோ, மத பாகுபாட்டினாலோ எந்த திட்டத்தையும் கொண்டுவருவதில்லை. மக்கள் முன்னேற்றம், மாவட்ட வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டுதான் திட்டங்களை கொண்டு வருகிறேன். ஆனால் வளர்ச்சித்திட்டங்களுக்கு எதிரானவர்கள் எதிர்ப்புகளால் அந்த திட்டங்கள் முடங்கிப்போகும் நிலை ஏற்படுகிறது.

குமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை மற்றும் துறைமுகம் திட்டம் நிச்சயமாக வரும். சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு நான் 30 தடவை சென்று வந்துள்ளேன். அதேபோல் இன்றும் (அதாவது நேற்று) நான் சபரிமலைக்கு செல்கிறேன். அங்கு என்ன நடக்கிறது? என்று வேவு பார்ப்பதற்காக செல்லவில்லை. சாதாரணமாக பல ஆண்டுகள் சென்றதைப்போல இந்த ஆண்டும் புறப்பட்டு செல்கிறேன்.

கஜா புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களில் சேதவிவரங்களை அறியவும், மக்களுக்கு தேவையான நிவாரணப்பணிகளை மேற்கொள்ளவும் தமிழக அமைச்சர்கள் மாவட்டம் வாரியாக சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு எதிராக தி.மு.க.வினர் போராட்டத்தை தூண்டி விடுகிறார்கள்.

அமைச்சர்கள் சேதப்பகுதிகளை பார்வையிட்டு சென்றபிறகு எந்த பணிகளும் நடைபெறவில்லை என்றால் மக்கள் போராடுவதில் தவறு இல்லை. எடுத்த எடுப்பிலேயே மக்கள் போராட்டம் நடத்துவது தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும். அதற்காக அமைச்சர்கள் செய்வது அனைத்துமே சரி என்று நான் கூறவில்லை.

ரஜினி பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பாரா? என்று இப்போது எதுவும் சொல்ல முடியாது. அவர் கட்சி ஆரம்பித்தபிறகுதான் அதுகுறித்து பேச முடியும்.

இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

அதன்பிறகு அவர் புலவர்விளையில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் அய்யப்ப சன்னிதானத்தில் இருமுடி கட்டி சபரிமலைக்கு புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்