விக்கிரமங்கலம் அருகே கால்வாய் அமைக்க கோரி சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

விக்கிரமங்கலம் அருகே கால்வாய் அமைக்ககோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

Update: 2018-11-24 22:30 GMT
விக்கிரமங்கலம்,

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கோவிந்தபுத்தூர் கிராமத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தெருக்களிலும், ஒரு சில வீடுகளிலும் வெள்ளநீர் புகுந்தது. இதனால் பாதிப்பு அடைந்த பொதுமக்கள் தெருக்களில் சூழ்ந்த வெள்ளநீரை அகற்றி கால்வாய் அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி கோவிந்தபுத்தூர் பஸ் நிலையம் அருகே தா.பழூர்- விக்கிரமங்கலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புசெழியன், விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கூறுகையில் கோரிக்கை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் மழைநீர் வடியும் வகையில் வடிகால் அமைக்கப்பட்டது. இந்த மறியல் போராட்டத்தால் தா.பழூர்- விக்கிர மங்கலம் சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்