நாகர்கோவில் கோட்டாரில் 4 கடைகளில் தீ விபத்து; ரூ.4 லட்சம் பொருட்கள் நாசம்

நாகர்கோவில் கோட்டாரில் நடந்த தீ விபத்தில் 4 கடைகள் தீப்பிடித்து எரிந்தன. இதில் கடையில் இருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமானது. இந்த சம்பவம் குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-11-30 23:53 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் கோட்டார் கூழக்கடை பஜாரில் ஏராளமான கடைகள் உள்ளன. இங்குள்ள கடை ஒன்றில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென தீப்பிடித்தது. அந்த தீ மளமளவென அருகில் உள்ள கடைகளுக்கும் பரவியது.

உடனே இதுபற்றி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, 2 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கோட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணிகளை மேற்கொள்ள உதவினர்.

இருப்பினும் அந்த பகுதியில் உள்ள மளிகை கடை, எண்ணெய் கடை உள்ளிட்ட 4 கடைகள் எரிந்து நாசமானது, மேலும் சில கடைகளின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரைகள் தீப்பிடித்து எரிந்து சாம்பலாயின. இந்த விபத்தில் மளிகை கடை, எண்ணெய் கடை உள்ளிட்ட 4 கடைகளிலும் இருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஒரு கடையின் மாடியில் இருந்த எண்ணெய் டின், கேன்கள் போன்றவையும் தீயில் முழுமையாக எரிந்துள்ளது.

இதுகுறித்து கடைகளின் உரிமையாளர்கள் குமாரதாஸ், கந்தசாமி, ஜெயக்குமார், ஆகிய 3 பேர் கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் தீவிபத்து எப்படி நடந்தது? என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதல்கட்டமாக அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில் நள்ளிரவு கடைகளில் தீப்பற்றி எரிவதற்கு முன் ஒரு சிறுவன் அங்குமிங்குமாக ஓடுவது போன்ற காட்சி பதிவாகி உள்ளது. அந்த சிறுவன் யார்? அந்த சிறுவனை வைத்து யாராவது தீவிபத்து சம்பவத்தை அரங்கேற்றினார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்த குமரி மாவட்ட பால் வளத்தலைவரும், கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான எஸ்.ஏ.அசோகன் தலைமையில், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், நகர செயலாளர் சந்துரு உள்ளிட்ட நிர்வாகிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு ஆறுதல் கூறினார்கள்.

இதேபோல் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் சேக்தாவூது, சத்தியமூர்த்தி, பேச்சிமுத்து, நடேசன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் வியாபாரிகளுக்கு ஆறுதல் கூறிய அவர்கள், அரசு உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் சுரேஷ்ராஜன் பேசினார். அதற்கு அதிகாரிகள் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்வதாக கூறியதாக தெரிகிறது.

மேலும் செய்திகள்