கன்னியாகுமரியில் சீசன் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு காலாவதியான உணவு பொருட்கள் அழிப்பு

கன்னியாகுமரியில் சீசன் கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் திடீரென ஆய்வு நடத்தினர். அப்போது, காலாவதியான உணவு பொருட்களை கொட்டி அழித்தனர்.

Update: 2018-12-01 22:45 GMT
கன்னியாகுமரி,


கன்னியாகுமரியில் தற்போது அய்யப்ப பக்தர்கள் சீசன் நடைபெற்று வருகிறது. இதையொட்டி 500–க்கும் மேற்பட்ட சீசன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல கடைகளில் உணவு மற்றும் தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கடைகளில் விற்கப்படும் உணவு பொருட்கள் காலாவதியாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து கன்னியாகுமரியில் உள்ள சீசன் கடைகளை ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி கருணாகரன் தலைமையில் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பிரவின் ரகு, சிதம்பர தாணுபிள்ளை, கிளாட்சன் ஆகியோர் நேற்று கன்னியாகுமரியில் உள்ள சீசன் கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.


அப்போது பல கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள், தின்பண்டங்கள் மற்றும் உணவு பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் கைப்பற்றி தரையில் கொட்டி அழித்தனர். மேலும், தரமற்ற உணவு பொருட்களையும் பறிமுதல் செய்து அழித்தனர்.

இதுபோன்ற ஆய்வுகள் தொடரும் எனவும், காலாவதியான பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

மேலும் செய்திகள்