நாகர்கோவிலில் முதியவர் குத்திக்கொலை பிச்சை எடுக்கும் தகராறில் பயங்கரம்

நாகர்கோவிலில் பிச்சை எடுக்கும் தகராறில், முதியவர் இரும்பு கம்பியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2018-12-02 22:15 GMT
நாகர்கோவில்,

தூத்துக்குடி மாவட்டம் பேய்குளம் மூலக்கரைபட்டியை சேர்ந்தவர் மாசானம் (வயது 57). இவர் நாகர்கோவில் வந்து, கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழாவுக்கு வந்த பக்தர்களிடம் பிச்சை எடுத்தார். இந்த நிலையில் நேற்று இரவு இவருக்கும், அங்கு ஏற்கனவே பிச்சை எடுத்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவருக்கும் இடையே பிச்சை எடுப்பதில் தகராறு ஏற்பட்டது.

அப்போது ஆத்திரம் அடைந்த மாசானம் திடீரென முதியவரை தாக்கியதாக தெரிகிறது. இதைப்பார்த்த அப்பகுதியினர் அவர்களை அங்கிருந்து விரட்டினர். பின்னர் 2 பேரும் செட்டிகுளம் பகுதிக்கு சென்றனர். அங்கும் அவர்களிடையே மீண்டும் தகராறு நடந்தது. அப்போது மாசானம் கல்லால் முதியவரை தாக்கினார். இதனால் கீழே விழுந்த முதியவரை இரும்பு கம்பியால் மாசானம் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் முதியவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

இந்த பயங்கர சம்பவம் பற்றி தகவல் அறிந்த கோட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதியவரை கொலை செய்த மாசானத்தையும் போலீசார் மடக்கிப் பிடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்