ஒகி புயலில் சிக்கி காணாமல் போன 18 மீனவர்களின் குடும்பத்துக்கு ரூ.1¾ கோடி - அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்

ஒகி புயலில் சிக்கி காணாமல் போன 18 மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடியே 80 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.

Update: 2018-12-02 22:15 GMT
கடலூர், 

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட ஒகி புயலால் கடலில் மீன்பிடிக்க சென்று காணாமல் போன கடலூர் மாவட்ட மீனவர்கள் 18 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதன்படி காணாமல் போன மீனவர்களின் 18 பேர் குடும்பங்களுக்கும் முதல் கட்டமாக தலா ரூ.10 லட்சத்தை ஏற்கனவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். மீதம் வழங்க வேண்டிய தலா ரூ.10 லட்சம் நிவாரணத்தொகையை மீனவ குடும்பத்தினர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடை பெற்றது.

இதில் காணாமல் போன 18 மீனவர்களின் குடும்பங்களுக்கும் று தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.1 கோடியே 80 லட்சத்துக்கான காசோலையை கலெக்டர் அன்புசெல்வன் முன்னிலையில் அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார். பின்னர் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசுகையில், இந்த நிவாரணத்தொகையை பெற்ற நீங்கள், இதை உங்களுக்காக, உங்கள் குழந்தைகளுக்காக செலவு செய்து, உங்களின் குடும்ப வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், சப்-கலெக்டர் சரயூ, மீன்வளத்துறை துணை இயக்குனர் ரேணுகா, உதவி இயக்குனர் கங்காதரன், முன்னாள் நகரசபை தலைவர் குமரன், முன்னாள் நகரசபை துணை தலைவர் சேவல்குமார், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பழனிசாமி, முன்னாள் கவுன்சிலர்கள் கந்தன், தமிழ்செல்வன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்