பணம் கேட்டு மிரட்டி: வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கிய 2 பேர் கைது

சேலத்தில் பணம் கேட்டு மிரட்டி வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2018-12-02 22:00 GMT
சேலம், 

சேலம் கிச்சிப்பாளையம் அருகே சுந்தர்தெரு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ராஜவேல் (வயது 28). இவர் கடந்த 29-ந்தேதி இரவு சேலம் அப்சரா பகுதி சாலையில் நடந்து சென்றார். அப்போது அங்கு உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் இருந்து குடிபோதையில் 2 பேர் வந்தனர்.

பின்னர் ராஜவேலை தடுத்து நிறுத்தி அவரிடம் பணம் கேட்டு மிரட்டினர். அப்போது அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சேர்ந்து ராஜவேலை கையால் தாக்கினர். பின்னர் திடீரென்று அவர்கள் வைத்து இருந்த பீர் பாட்டிலால் தாக்கி விட்டு தப்பி சென்று விட்டனர்.

இதில் ராஜவேலுக்கு தலை உள்பட உடலில் பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலன் வழக்குப்பதிவு செய்து கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி.காலனி பகுதியை சேர்ந்த சுரேஷ் (29), கார்த்திகேயன் (27) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினார். அப்போது இருவரும் சேர்ந்து ராஜவேலை பீர் பாட்டிலால் தாக்கியதை ஒப்புக்கொண்டனர். இதைத்தொடர்ந்து 2 பேரையும் கைது செய்து மேலும் விசாரித்து வருகிறார். 

மேலும் செய்திகள்