வேளாங்கண்ணி லாட்ஜில் காதல் ஜோடி தூக்கில் தொங்கினர் காதலன் சாவு; காதலி உயிர் ஊசல்

வேளாங்கண்ணியில் உள்ள ஒரு லாட்ஜில் காதல் ஜோடி தூக்கில் தொங்கினர். இவர்களில் காதலன் பரிதாபமாக இறந்தார். காதலி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2018-12-03 22:15 GMT
வேளாங்கண்ணி,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கல்லுப்பட்டி பெருமாள் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் இஞ்ஞாசி முத்து. இவரது மகன் டேனியல் தாமஸ்(வயது 23). இவர் எம்.பில். படித்துள்ளார். காரைக்குடி நாஞ்சுரி ஏந்தல் பகுதியை சேர்ந்த சந்திரன் மகள் நந்தினி (22) எம்.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். காதலர்களான இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.

கடந்த 1-ந் தேதி(சனிக் கிழமை) இரவு இருவரும் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்துள்ளனர். அங்கு பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துள்ள அவர்கள் பின்னர் அங்குள்ள ஒரு லாட்ஜில் தங்கியுள்ளனர். மறுநாள் மாலை அறையை காலி செய்வதற்காக விடுதி பணியாளர்கள் அந்த அறைக்கு சென்று பார்த்தபோது அறையின் கதவு திறந்து கிடந்தது.

காதலன் சாவு; காதலி உயிர் ஊசல்

அங்கு டேனியல் தாமசும், நந்தினியும் அறையில் உள்ள மின்விசிறி கொக்கியில் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தனர். அதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த லாட்ஜ் பணியாளர்கள் அவர்களை மீட்டனர். அப்போது டேனியல் தாமஸ் இறந்து விட்டது தெரிய வந்தது. நந்தினி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். அவரை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்