ஓட்டப்பயிற்சிக்கு சென்ற மாணவன் ரெயில் மோதி பலி தம்பி உள்பட 2 சிறுவர்கள் படுகாயம்

ஓட்டப்பயிற்சிக்கு சென்ற 9-ம் வகுப்பு மாணவன் ரெயில் மோதி பலியானான். அவனது தம்பி உள்பட 2 சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.

Update: 2018-12-03 23:27 GMT
வசாய்,

பால்கர், பொய்சர் பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் சந்தன் (வயது15). இவனது தம்பி குந்தன்(11). நேற்று முன்தினம் அதிகாலை சந்தன் தனது தம்பி குந்தன் மற்றும் அருகில் வசித்து வரும் மோகித் (9) என்ற சிறுவனுடன் ஓட்டப்பயிற்சிக்கு சென்றான். பின்னர் 3 பேரும் ஓட்டப்பயிற்சி முடிந்து கெய்ர்பாடா ரெயில்வே பாலம் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் சிறுவர்கள் மீது மோதியது.
இதில், படுகாயமடைந்த சிறுவன் சந்தன் சம்பவ இடத்திலேயே பலியானான். மற்ற 2 பேரும் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த ரெயில்வே போலீசார் சந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் காலை இழந்த மோகித்திற்கும், படுகாயமடைந்த குந்தனுக்கும் மும்பையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்