தேன்கனிக்கோட்டை அருகே விவசாய பயிர்களை நாசம் செய்த யானைகள்

தேன்கனிக்கோட்டை அருகே விவசாய பயிர்களை யானைகள் நாசம் செய்தன.

Update: 2018-12-04 22:30 GMT
தேன்கனிக்கோட்டை,

கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வந்த 75 யானைகள் நொகனூர் காப்பு காட்டில் முகாமிட்டுள்ளன. இதில் 30 யானைகள் தனியாக பிரிந்து நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியே வந்தன. அவை தேன்கனிக்கோட்டை அருகே உள்ள லிங்கதீரனப்பள்ளி கிராமத்தில் சின்னகுட்டி என்பவரின் விவசாய நிலத்தில் புகுந்து அங்கு இருந்த பப்பாளி மரங்களையும், தென்னை மரங்களையும் சேதப்படுத்தின. மேலும் சொட்டு நீர் பாசன குழாய்களையும் கால்களால் மிதித்து உடைத்தன.

பிறகு அவை அருகில் உள்ள ரவி, அனுமப்பா, புட்டம்மா, சந்திரப்பா ஆகியோரின் விவசாய நிலங்களுக்குள் புகுந்து ராகி, சோளம், துவரை, அவரை ஆகிய பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தின. நேற்று காலை விவசாயிகள் தங்களின் நிலங்களுக்கு சென்றனர். அங்கு பயிர்களை யானைகள் சேதப்படுத்தி இருந்ததை கண்டு கண் கலங்கினார்கள். இந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்