தட்கல் ரெயில் டிக்கெட்டுகளை அதிகவிலைக்கு விற்ற டிராவல்ஸ் ஏஜென்சி உரிமையாளர் கைது கம்ப்யூட்டர்கள் பறிமுதல்

தட்கல் முறையில் ரெயில் டிக்கெட் பதிவு செய்து அதிக விலைக்கு விற்ற டிராவல்ஸ் ஏஜென்சி உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். கம்ப்யூட்டர்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2018-12-05 22:45 GMT
காட்பாடி, 

வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வடமாநிலத்தை சேர்ந்த நோயாளிகள் அதிக அளவில் சிகிச்சைக்காக வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் ரெயிலில் வருகிறார்கள். இதனால் வேலூரில் ஆற்காடு ரோடு, காந்தி ரோடு, தோட்டப்பாளையம் பகுதிகளில் அதிக அளவில் டிராவல்ஸ் ஏஜென்சிகள் செயல்பட்டு வருகிறது.

இந்த டிராவல்ஸ் ஏஜென்சிகள் மூலம் வெளிமாநிலத்தில் இருந்து சிகிச்சைக்கு வந்து திரும்புகிறவர்களுக்கு ரெயில் டிக்கெட், விமான டிக்கெட் ஆகியவற்றை பெற்றுத்தருகிறார்கள். இது வடமாநிலத்தை சேர்ந்த நோயாளிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கிறது. ஆனால் சிலர் இதை மோசடியாக பயன்படுத்தி வருகிறார்கள்.

வேலூர் சேண்பாக்கம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 25) என்பவர் காந்தி ரோட்டில் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவர் தட்கல் முறையில் ரெயில் டிக்கெட் பதிவு செய்து அதை அதிக விலைக்கு விற்பதாக ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசாருக்கு புகார்கள் வந்தது.

அதன்பேரில் காட்பாடி ரெயில்வே பாதுகாப்புப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம், ராமச்சந்திரன் நடத்தி வரும் டிராவல்ஸ் ஏஜென்சி நிறுவனத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது தட்கல் முறையில் 93 டிக்கெட்டுகளை பதிவு செய்து அதை ரூ.3 லட்சத்து 64 ஆயிரத்திற்கு விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர்களை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட ராமச்சந்திரன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்