குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா நினைவு தின மவுன ஊர்வலம்

குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா நினைவு தின மவுன ஊர்வலம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது.

Update: 2018-12-05 22:45 GMT
நாகர்கோவில்,

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 2-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதே போல குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பிலும் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மவுன ஊர்வலம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. ஊர்வலத்துக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் தலைமை தாங்கினார். இந்த ஊர்வலம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சந்திப்பு அருகே இருந்து தொடங்கியது. ஊர்வலத்தின் முன் ஒரு வாகனம் சென்றது. அந்த வாகனம் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஜெயலலிதாவின் உருவப்படம் வைக்கப்பட்டு அதன் அருகில் அ.தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டு இருந்தன.

இந்த வாகனத்தின் பின்னால் திரளான நிர்வாகிகள் நடந்து சென்றனர். ஊர்வலமாக சென்ற அ.தி.மு.க. நிர்வாகிகளில் பலர் கருப்பு சட்டையும், அதில் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். ஊர்வலமானது டதி பள்ளி சந்திப்பு, கோர்ட்டு ரோடு வழியாக வேப்பமூடு பூங்காவில் முடிவடைந்தது.

பின்னர் அங்கு வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் மற்றும் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அவை தலைவர் சேவியர் மனோகரன், துணை செயலாளர் ராஜன், பொருளாளர் திலக், நகர செயலாளர் ஜெயசந்திரன், அணி செயலாளர்கள் ஜெயசீலன், சுகுமாரன், பொன் சுந்தர்நாத், தோவாளை ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் நிர்வாகிகள் நாஞ்சில் சந்திரன், லதா ராமசந்திரன், தர்மர், ராணி, வக்கீல் சுந்தரம், நகர அவைத்தலைவர் விக்ரமன் உள்பட பலர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்