ரெயில்களில் விதிமுறைகளை மீறி பயணம்: கடந்த 8 மாதங்களில் ரூ.7.21 கோடி அபராதம் வசூல்

சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 8 மாதங்களில் விதிமுறைகளை மீறி பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ.7.21 கோடி அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-12-05 23:00 GMT
சூரமங்கலம், 

சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கோட்ட மேலாளர் சுப்பாராவுக்கு புகார்கள் வந்தன. இதன்பேரில் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் விஜூவின் தலைமையில் பயணச்சீட்டு பரிசோதகர்கள், ரெயில்வே பாதுகாப்பு படையினர் அடங்கிய குழுவினர் ரெயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி இந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை எக்ஸ்பிரஸ், பயணிகள் ரெயில்களில் டிக்கெட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் மட்டும் ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ததாக 29 ஆயிரத்து 607 பேர் சிக்கினர். இவர்கள் மீது ரெயில்வே சட்டப்படி வழக்குப்பதிவு செய்து ரூ.1 கோடியே 23 லட்சத்து 95 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணம் செய்ய டிக்கெட் எடுத்துவிட்டு முன்பதிவு செய்த பெட்டிகளிலும் மற்றும் ஏ.சி. வசதியுடைய பெட்டிகளிலும் பயணம் செய்ததாக சுமார் 14 ஆயிரம் பேர் கண்டறியப்பட்டனர். பின்னர், அவர்களுக்கு அபராதம் விதித்ததின் மூலம் ரூ.5 கோடியே 79 லட்சத்து 92 ஆயிரத்து 244 வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், ரெயிலில் புக்கிங் செய்யாமல் சரக்குகளை எடுத்து சென்றதாக 4 ஆயிரத்து 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதன்மூலம் ரூ.17 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 8 மாதங்களில் ரெயில்களில் விதிமுறைகளை மீறி பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ.7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 224 அபராதம் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


ரெயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பது தண்டணைக்குரியது. அவர்களிடம் இருந்து இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதுடன் ஓராண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வதை ரெயில் பயணிகள் தவிர்க்க வேண்டும் என்றும், இதுபோன்ற சோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்