ஆரணியில் நிதிநிறுவனம் நடத்தி ரூ.1¼ கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது 5 ஆண்டுகளுக்கு பின்னர் சிக்கினார்

ஆரணியில் நிதிநிறுவனம் நடத்தி ரூ.1¼ கோடி மோசடி செய்துவிட்டு தலைமறைவானவரை 5 ஆண்டுகளுக்கு பிறகு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-12-06 22:00 GMT
காட்பாடி, டிச.7-

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையம் சந்தரம் தெருவை சேர்ந்தவர் சுப்புராயன். இவருடைய மகன் அரி (வயது 37). இவர் ஆரணியில் நிதிநிறுவனம் நடத்தி வந்தார். அப்போது அவரிடம் பலர் பணம்செலுத்தி வந்தனர்.

அவர்களுக்கு உரிய பணத்தை திருப்பிக்கொடுக்காமல் 5 ஆண்டுகளுக்கு முன்பு அரி தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து அன்பழகன் என்பவர் வேலூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தலைமறைவான அரி 45 நபர்களிடமிருந்து ரூ.1 கோடியே 26 லட்சத்து 5 ஆயிரம் வரை பணம் பெற்று மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து தலைமறைவான அரியை போலீசார் கடந்த 5 ஆண்டுகளாக தேடிவந்தனர். இந்த நிலையில் தற்போது அவர் புதுக்கோட்டையில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. உடனடியாக பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு நவநீதகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் புதுக்கோட்டைக்கு சென்று அங்கு பதுங்கியிருந்த அரியை கைதுசெய்தனர்.

பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல்சிறையில் அடைக்கப்பட்டார். இந்த மோசடி சம்பந்தமாக புகார் அளிக்கும் மனுதாரர்கள் ஒரிஜினல் ஆவணங்களுடன் வேலூர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்