சித்தராமையா ஆட்சியில் ரூ.35 ஆயிரம் கோடி ஊழல் பா.ஜனதா பரபரப்பு குற்றச்சாட்டு

சித்தராமையா ஆட்சியில் ரூ.35 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக பா.ஜனதா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளது.

Update: 2018-12-06 22:00 GMT
பெங்களூரு, 

சித்தராமையா ஆட்சியில் ரூ.35 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக பா.ஜனதா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளது.

10 சதவீத ‘கமிஷன்’ அரசு

கர்நாடக பா.ஜனதா பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.எல்.சி., அஸ்வத் நாராயணா எம்.எல்.ஏ. ஆகியோர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது சித்தராமையா ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்த கையேடு ஒன்றை அவர்கள் வெளியிட்டனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-

கடந்த சட்டசபை தேர்தலின்போது, காங்கிரஸ் ஆட்சியை 10 சதவீத ‘கமிஷன்’ அரசு என்று பிரசாரத்தில் பிரதமர் மோடி பகிரங்கமாக விமர்சனம் செய்தார். இது தற்போது நிரூபணமாகியுள்ளது.

தங்க நகைகளை...

ஊழல் தடுப்பு படையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, கர்நாடக தொழில் வளர்ச்சி வாரியத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தினர். இதில் அதிகளவில் சொத்துகள் மற்றும் தங்க நகைகளை கைப்பற்றினர்.

பெங்களூரு வளர்ச்சி ஆணைய கமிஷனராக பணியாற்றியவர் சாம்பட். அவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் உள்ளன. அவர் கர்நாடக அரசு பணியாளர் ஆணைய தலைவராக முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்டார். அவர் எதற்காக அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார் என்பது குறித்து சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது.

19 சதவீதம் வித்தியாசம்

கர்நாடகத்தில் 2016-17-ம் ஆண்டில் அரசின் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 19 சதவீதம் வித்தியாசம் வருவதாக கணக்கு தணிக்கை அறிக்கையில் விவரமாக கூறப்பட்டுள்ளது. தவறு செய்த அதிகாரிகளை இந்த அரசு பாதுகாக்கிறது. இதை கர்நாடக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

கணக்கு தணிக்கை அறிக்கைப்படி பார்த்தால், சித்தராமையா ஆட்சியில் ரூ.35 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து கர்நாடக அரசு விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்