பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கரூர் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நேற்று கரூர் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-06 23:00 GMT
கரூர்,

கரூரில் உள்ள டெக்ஸ்டைல், கொசுவலை, பஸ்பாடி கட்டுதல் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களில் பல்வேறு இடங்களில் இருந்து வந்து தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் ரெயில்களிலேயே பயணம் மேற்கொள்கின்றனர். இதற்காக கரூர் ரெயில் நிலையத்திற்கு ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். மேலும் கரூரில் வசிக்கும் பொதுமக்களும் நீண்ட தூர பயணத்தை ரெயில் மூலமே மேற்கொள்கின்றனர்.

இந்த நிலையில் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நேற்று அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு கரூர் ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ரெயில் நிலையத்தின் முன்புற பகுதியில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் ஏட்டுகள் ஞானபிரகாசம், மாசிலாமணி உள்பட போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்த பின்னரே, உள்ளே அனுப்பினர்.

மேலும் நவீன ஸ்கேனர் கருவியின் வழியாகவே பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ரெயில் நிலைய நடை மேடைகளில் ஆங்காங்கே போலீசார் ரோந்து மேற்கொண்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியான நபர்களை பிடித்து விசாரித்து அனுப்பி வைத்ததையும் காண முடிந்தது. இதனால் கரூர் ரெயில் நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. 

மேலும் செய்திகள்