ஆர்.எஸ்.மங்கலம் அருகே பட்டப்பகலில் பூசாரி வீட்டில் நகை, பணம் திருட்டு; வாலிபர் சிக்கினார்

ஆர்.எஸ்.மங்கலம் அருகே பட்டப்பகலில் பூசாரி வீட்டில் நகை, பணத்தை திருடிவிட்டு தப்பி ஓடியபோது தண்ணீரில் மூழ்கிய வாலிபர் சிக்கினார்.

Update: 2018-12-07 22:15 GMT

ஆர்.எஸ்.மங்கலம்,

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா சனவெளி கிராமத்தை சேர்ந்தவர் சிவசங்கர பாண்டியன்(வயது 60). இவர் குறி சொல்லும் பூசாரி தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவருடைய மனைவியும், மருமகளும் மதுரைக்கு சென்று விட்டதால் மதிய சாப்பாட்டுக்காக சிவசங்கர பாண்டியன் ஆர்.எஸ்.மங்கலம் சென்றுள்ளார்.

பின்பு வீட்டுக்கு திரும்பி வந்தபோது வெளியே உள்ள கதவு பூட்டிய நிலையில் வீட்டின் தலைவாசல் திறந்து கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சிவசங்கர பாண்டியன் சத்தம் போட்டுள்ளார். அப்போது வீட்டுக்குள் இருந்து ஹெல்மெட் அணிந்து வாலிபர் ஒருவர் அரிவாளுடன் வெளியே வந்துள்ளார். இதனால் சிவசங்கர பாண்டியன் பதறியடித்து சாலைக்கு ஓடிவந்து சத்தம்போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர்.

ஆனால் அதற்குள் அந்த மர்ம வாலிபர் வயல்வெளியில் குதித்து தப்பியோடி சனவெளி கண்மாய்க்குள் இறங்கி தண்ணீருக்குள் மூழ்கினான். இதைக்கண்ட பொதுமக்கள் கண்மாய்க்குள் இருந்து அந்த நபரை பிடித்து தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். தகவல் அறிந்து திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார், இன்ஸ்பெக்டர் புவனேசுவரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அந்த மர்ம நபர் சென்னையை சேர்ந்த சந்தோஷ்(வயது 30) என்பது தெரியவந்தது. பொதுமக்கள் தாக்கியதில் அந்த வாலிபர் படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து அவரை போலீசார் சிகிச்சைக்காக அவரை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சிவசங்கரன் வீட்டில் வைத்திருந்த 13 பவுன் தங்க நகைகள், ரூ.1000 ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை என ஆர்.எஸ்.மங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்