திருமுருகன்பூண்டி அருகே கடையின் மேற்கூரையை பிரித்து திருடியவர் கைது

திருமுருகன்பூண்டி அருகே கடையின் மேற்கூரையை பிரித்து திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-12-07 22:00 GMT
அனுப்பர்பாளையம்,

திருப்பூர் திருமுருகன்பூண்டியை அடுத்த பள்ளிபாளையத்தை சேர்ந்தவர் பரமேஸ்வரன் (வயது 25). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு அவர் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து பரமேஸ்வரனின் நண்பர் அவரிடம் சென்று கடைக்குள் யாரோ மர்ம ஆசாமி உள்ளே சென்றிருப்பதாக கூறினார். இதையடுத்து பரமேஸ்வரன் கடைக்கு விரைந்து சென்றார்.

அப்போது மர்ம ஆசாமி ஒருவர் கடையில் இருந்து தப்பி செல்ல முயற்சி செய்தார். இதையடுத்து பொதுமக்கள் உதவியுடன் பரமேஸ்வரன் அந்த நபரை பிடித்தார். அவரை அனுப்பர்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த வைகைநல்லூர் பகுதியை சேர்ந்த கணேஷ்குமார் (27) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் பரமேஸ்வரனின் கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே சென்று கடையில் இருந்த ரூ.2 ஆயிரத்து 300ஐ திருடி சென்றபோது பொதுமக்களிடம் பிடிபட்டது தெரிய வந்தது. இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமுருகன்பூண்டியை சேர்ந்த தங்கமணி என்பவரின் வீட்டு மேற்கூரையை பிரித்து வீட்டில் இருந்த டி.வி., டி.வி.டி. பிளேயர், மின்சார அடுப்பு உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றதையும் கணேஷ்குமார் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.2,300 மற்றும் பொருட்களை பறிமுதல் செய்தனர்.


மேலும் செய்திகள்