சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி: வாலிபருக்கு 5 ஆண்டு சிறை - கடலூர் கோர்ட்டு தீர்ப்பு

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2018-12-07 22:00 GMT
கடலூர், 

பண்ருட்டி மருங்கூர் ஏரிமேட்டு தெருவை சேர்ந்தவர் ஜெயபாலன். இவருடைய மகன் சபாபதி (வயது 19). தொழிலாளி. இவர் கடந்த 15.8.2018 சுதந்திர தினத்தன்று அதே பகுதியை சேர்ந்த 2-ம் வகுப்பு படித்து வரும் 6 வயது சிறுமியை தனியாக வீட்டுக்கு அழைத்து சென்றார். பின்னர் அந்த சிறுமியை வீட்டு கதவுக்கு பின்னால் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

இது பற்றி அந்த சிறுமி அவரது தாயிடம் கூறினார். இதையடுத்து அந்த சிறுமியின் தாய் பண்ருட்டி மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி வழக்குப்பதிவு செய்து சபாபதியை கைது செய்தார்.

இந்த வழக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி லிங்கேஸ்வரன் தீர்ப்பு கூறினார். அதில், இவ்வழக்கில் சபாபதி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் செல்வப்பிரியா ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்