புயலில் சேதமடைந்த மீன்பிடி படகுகளுக்கு ரூ.40 லட்சம் நிவாரணம் டி.ராஜா எம்.பி. வலியுறுத்தல்

புயலில் சேதமடைந்த மீன்பிடி படகுகளுக்கு ரூ.40 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

Update: 2018-12-08 22:45 GMT
சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருந்த 246 விசைப்படகுகள், கஜா புயலில் சேதமடைந்தன. இதனால் இப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா எம்.பி. மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் சேதமடைந்த படகுகளை பார்வையிட்டு மீனவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

புயலில் முழுமையாக சேதமடைந்த படகுகளுக்கு ரூ.5 லட்சமும், பகுதி அளவு பாதிக்கப்பட்ட படகுகளுக்கு ரூ.3 லட்சமும் அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.

அரசு அறிவித்துள்ள நிவாரணம் மீனவர்களுக்கு போதுமானது கிடையாது. இதனால் மீனவர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். புயலால் சேதமடைந்த ஒரு படகுக்கு ரூ.40 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். மீனவர்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். புயல் பாதித்த மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்