பூந்தமல்லியில் 2–வது மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி சாவு

பூந்தமல்லியில் மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி இறந்தார்.

Update: 2018-12-09 21:45 GMT

பூந்தமல்லி,

பூந்தமல்லி, டிரங்க் ரோடு பகுதியில் தேவாலயம் அருகே உள்ள காலி இடத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், பிணமாக கிடந்தவர் திருநின்றவூரை சேர்ந்த பவுல்ராஜ்(35) என்பது தெரியவந்தது. அந்த பகுதியில் சாலையோரத்தில் வசித்து வந்த அவர் கடந்த சில வருடங்களாக குப்பைகள் மற்றும் பழைய இரும்பு பொருட்களை சேகரித்து கடைக்கு கொடுத்து வருமானம் ஈட்டி வந்துள்ளார். மேலும் இரவு நேரத்தில் அவர் அந்த பகுதியில் உள்ள கடையின் 2–வது மாடியில் தூங்குவது வழக்கம்.

அதேபோல் நேற்று முன்தினம் இரவும் தூங்குவதற்காக நடந்து சென்றபோது, கால் தவறி மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்